Sunday, May 5, 2013

சென்ற பதிவில் குருகுலவாசம் பற்றி பார்த்தோம், இந்த பதிவில் நாம் கூறிய முறைப்படியான குருகுல வாசத்திற்கான படிமுறைகள் என்னவென்று பார்ப்போம்.

1 . மனதில் இவற்றை  கற்க வேண்டும் என்ற விருப்பம்.

எவன் ஒருவன் அமைதியான மனத்துடன், மௌனமாக, ஒருமைப்பட்ட மனதுடன் அறிவைத்தேடுவதற்கான பயணத்தினை அடைகிறானோ, அவன் சித்த வித்தையினையோ மற்ற எந்த அறிவினையும் அடைவதற்குரிய பாதையினை அறிகிறான், அப்படிப்பட்டவன் எப்போதும் குருவை அடைகிறான். இதுவே சித்த வித்தைக்கான முதல் அடிப்படை. இதனை நன்கு மனதில் பதியவைத்துக்கு கொண்டு இனி விளக்கங்களைப் பார்ப்போம்.

ஒரு நல்ல வளமான நிலத்தில் தரமான விதையினை விதைத்து அதற்கு தகுந்த உரமிட்டு, நீர்பாய்ச்சி பராமரித்தால் சிறந்த விளைச்சலையும் கனிகளையும் பெறுவது போல் இந்தப்பாடங்களை கற்பதால் உங்களது சித்தமாகிய ஆழ்மனதில் இவற்றின் அடிப்படை விதைக்கப்படும். விதைகள் தகுந்த சித்த மானச பக்குவம் வரும் பொழுது பலனினைத்தரும். ஆதலால் ஆர்வமுடன் இவற்றைப் படித்து மட்டுமே வருவீர்களானாலேயே ஆனால் கூட‌ அவை உங்களுக்கு தகுந்த பக்குவம் வரும் சூழ்நிலைகளில் உதவும். அத்த‌கைய‌ நிலையின் பின்பு இதில் கூற‌ப்ப‌ட்ட விட‌ய‌ங்க‌ள் உங்க‌ள‌து சொந்த‌ அனுப‌வ‌ங்க‌ளாகும்.

2. குருவின் சூஷ்ம தொடர்பு பெறுதலுக்கான விதி 

இன்று குரு தத்துவம் தனிமனித போற்றுதல்களாகவே உள்ளது. சித்த வித்தைப்படி குருதத்துவம் என்பது என்ன என்பதனை இங்கு பார்த்துவிட்டு மேலே செல்லவும்.

ஆக குருதத்துவம் என்பது எல்லையற்ற பிரபஞ்ச அறிவு அவற்றை பெரும் தன்மையினை எம்மில் உருவாக்கிக் கொள்ளும் முறைதான் குரு சிஷ்ய பாவம்.

அடுத்து குருவிட‌மிருந்து வித்தையினைப் பெறுவ‌தும் ச‌ரியாக‌ விள‌ங்கிக் கொள்வ‌தும் எப்ப‌டி? ப‌ல‌ரிற்கு நேருக்கு நேராக நின்று விள‌ங்க‌ப்ப‌டுத்தினால் ம‌ட்டுமே குருவிடம் வித்தை பெறுத‌ல் என‌ உறுதியாக‌ எண்ணுகின்ற‌ன‌ர், அது ஒருவ‌கையில் உண்மையாக‌ இருந்தாலும் குருவிட‌ம் இருந்த எல்லோரும் வித்தைக‌ளை அறிந்த‌வ‌ர்க‌ள் இல‌ர். அதேபோல் குருவை விட்டு பௌதீகமாக‌ தூரத்தில் இருந்தவர்கள் பலர் அரிய ஞானத்தினைப் பெற்றிருக்கிறார்கள். அப்ப‌டியானால் ஒரு சில‌ர் ம‌ட்டுமே குருவிட‌மிருந்து வித்தை பெற‌ த‌குதியான‌வ‌ர்க‌ளாக‌ இருப்ப‌த‌ற்கான‌ கார‌ண‌ம்தான் என்ன‌? இத‌ற்கு த‌த்துவ‌ ரீதியாக‌ ப‌ல‌வித‌ (பூர்வ‌ புண்ணிய‌ ப‌ல‌ன், குரு அருள் என‌) ப‌ல‌வித‌ விள‌க்க‌ங்க‌ள் இருப்பினும் நாம் இங்கு கூற‌வ‌ருவ‌து இத‌ற்கான‌ விஞ்ஞான அடிப்படையிலான‌ கார‌ண‌த்தினை, இத‌ன் மேல‌திக‌ விள‌க்க‌ங்க‌ள் எண்ண‌த்தின் இய‌க்க‌விய‌ல் என்ற‌ ப‌குதியில் விரிவாக‌ விள‌க்க‌ப்ப‌டும். இங்கு இத‌ன் அடிப்ப‌டையினை விள‌க்கி விடுகிறேன்.

இங்கு பௌதிக‌விய‌ல் கோட்பாட்டினை அடிப்ப‌டையாக‌ கொண்டால் எந்த‌ ஒரு எண்ண‌மும் அலைவ‌டிவ‌த்தினை (மூளையில் எண்ண‌ அலைக‌ள் ஆல்பா, பீட்டா, காமா, தீட்டா ஆகிய‌ அலைவ‌டிவாக‌ உருவாகுவ‌தாக‌ ஈ.ஈ.ஜி க‌ற்கைக‌ள் தெரிவிக்கின்ற‌ன‌)))0)) கொண்டிருக்கின்ற‌ன‌... பௌதிக‌விய‌ல்/இய‌ற்பிய‌ல் க‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு தெரியும் அலைக‌ள் ப‌ரிவுறும் என்ப‌து. ப‌ரிவு (resonance) என்பது ஒவ்வொரு அலையும் குறித்த அதிர்வினை (frequency) அடையும் போது மிக உயர்ந்த அலைவேகத்தினை அடையும். இந்த ஒத்த அதிர்வு நிலையினை அடையும் போது குறித்த தொகுதிகள் தமக்கிடையே சக்திப்பரிமாற்றத்தினை ஏற்படுத்திக் கொள்ளும். இந்த சக்திப்பரிமாற்றம் நிகழும் சந்தர்ப்பங்கள் பலவாறக இருக்கலாம். இந்த அடிப்படையிலேயே மானச, சித்த வித்தைகள் அனைத்தும் இயங்குகின்றன. இது எப்படி எனப்பார்ப்போம்.

சித்த வித்தையின் படி (மற்றைய முறைகளும்தான் பூஜை, உபாசனை, யோக சாதனை, தாந்திரீகம்) நாம் எமது சக்தியினை அதிகரித்துக் கொள்வதே எமது இலக்கு. அதாவது உயர் சக்திகளுடன் எமது  எண்ண அலைகளை பரிவுறவைத்து தொடர்புகொள்ளுவதனால் எமது சக்தியினை  அதிகரித்துக்கொள்ளலாம். அதன் படி எமது தற்போதைய "இயற்கையான எண்ண அதிர்வினை” ஒரு ஒத்திசைவானநிலைக்கு (Harmonic state) கொண்டுவந்து, பின்னர் உயர்ந்த அதிர்வொன்றுடன் (higher frequency) சமப்படுத்தும் போது எமக்கு உயர்ந்த அதிர்வின் சக்திப்பரிமாற்றம் (energy transfer) கிடைக்கிறது, இவற்றை ஆரம்பத்தில் சிறுகச் சிறுக செய்து நீண்டகாலச் சாதனையில் எம்முடன் நிலைக்கச் செய்தலே சித்த வித்தையின் இலக்கு. இப்படிச் செய்து சித்தி பெற்றதால்தான் சித்தர்கள் என பெயர் வந்தது

3 . குருவின் சூஷ்ம தொடர்பே உண்மையான குரு சிஷ்ய தொடர்பு


எம்மிடம் மனம் இருக்கிறது, தற்போது அதனை உயர் சக்தியுடன் பரிவுறச் செய்யவேண்டும். உயர் சக்தி எது எம்மைப்பொறுத்தவரையில் "குரு", எம் அனைவருக்கும் ஆதி குரு அகஸ்திய மகரிஷி, ஆகவே அவருடைய அதிர்வுடன் எமது அதிர்வை பரிவுறச்செய்வதால் எம்முள்ளே அவரது சக்தியினை பெற்றுக் கொள்ளலாம். அவர் பெற்ற சக்திகள் அனைத்தும் மன, சித்த அலைகளாக பிரபஞ்சத்தில் உள்ளன, அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் அவருடன் ஒத்திசைவதே!

இந்த இடத்தில் அகஸ்திய மகரிஷி என ஒருவரை மட்டுமே நீங்கள் தொடர்புகொள்ளவேண்டும் எனச் சொல்லவில்லை, உங்களுக்கு விரும்பிய எந்தச் சித்தரையோ, தெய்வங்களையோ, தேவதைகளைக் கூட அழைக்கலாம். எப்படியாயினும் அகத்தின் இயல்பை அறிந்த உயர் பிராண சக்தியுடைய ஞான சித்தர் ஒருவரை வழிகாட்டியாக பெற்றால் உங்களது சக்தியினை உயர்த்திக்கொள்ளலாம், ஞானத்தினையும் பெற்றிடலாம் என்பதுதான் கருத்து.

எப்படி ஒத்திசைவது? அதற்கு இறைவன் அளித்த கொடையே சித்தம் எனும் ஆழ்மனம்.

அதை இயக்குவது எப்படி? தொடர்ச்சியான எண்ணம்! ஜெபம்

ஆம் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய சக்தினை தொடர்ச்சியான எண்ண அலை மூலம் சித்தத்தில் பதிப்பிக்கும் முயற்சிதான் ஒரே வழி!

ஆகவே சித்த வித்தை கற்பதற்கு  ஆரம்பத்திலிருந்தே குருவுடன் சூஷ்ம தொடர்பினை ஏற்படுத்திக்கொள்வதும், மனம், சித்தம் ஆகியவற்றை ஒத்திசைவாக வைத்துக் கொள்வதும் சித்த வித்தையினை கற்பதற்கான முக்கியமான அடிப்படை தேவையாகும்.

4 . சித்த வித்தையின் தன்மையினை  புரிந்துகொள்ளுதல் 

சித்த வித்தை என்பது நாம் தற்காலத்தைய அறிவுத்தேடலில் ஆசிரியர் ஒருவரிடமோ, விரிவிரையாளர் ஒருவரிடமோ வகுப்பு போய் படிக்கும் விடயமல்ல. எல்லா அறிவும் பிரபஞ்சமாகிய ஆகாய மனதில் (Cosmic mind) உறைந்துள்ளது. அவற்றை அறிந்துகொள்ள சூஷ்ம தன்மையுடைய சித்தம்  எனும் ஆழ்மனம் மனிதனிற்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ளது. அதனை செயற்படுத்தி நாமாக அவற்றை அறிந்துகொள்ளும் பயிற்சிதான் சித்த வித்தை. ஆகவே ஒரு விடயத்தினை நன்கு புரிந்துகொள்ளுங்கள் உங்களுக்கு யாரும் எதுவும் கற்பித்து விடமுடியாது, குருவானவர் அவற்றை அறிவதற்கு உரிய முறைகளை மட்டுமே தருவார். அவற்றை பயிற்சித்து அனுபவமாக்கி கொள்ளவேண்டியது உங்கள் கடமை.

இந்தப் பயிற்சிகளின் போது ஒவ்வொருவருக்கும் உண்டாகும் அனுபவம் அவர்களுக்கே உரியதாகும். அவற்றில் உயர்வு தாழ்வு, சரி பிழை என்பது இல்லை. அவரவர் மன, பிராண சித்த பரிணாமங்களுக்கு ஏற்ப அவை வேறுபடும். ஆதலால் பலபேரின் அனுபவங்களைக் கேட்டு மனக் குழப்பமுற வேண்டாம்.

இதிலிருந்து உங்களுக்கு இன்னும் ஒரு விடயம் விளங்கியிருக்கும் என எண்ணுகிறேன்.  அகம் சார்ந்த வித்தைகள் எவற்றிலும் எது சரி அது பிழை என்ற மேற்கத்தைய தர்க்க விவாதங்கள் இல்லை. எமது மூல நூற்களை எடுத்துப் பார்த்தீர்களானால் சூத்திர வடிவிலேயே இருக்கும். அவற்றின் பொருளை குரு எப்படி என்று விளக்கி சொல்லியிருக்க மாட்டார். அவற்றை மனதில் இருத்திக்கொண்டு உங்கள் பயிற்சியினை செய்து வருவிர்களானால் உங்கள் பயிற்சிக்கு தக்க விதத்தில் அவற்றின் பொருளும் பிரயோகமும் விளங்கும்.  உங்களுக்கு இன்னும் தெளிவாக விளங்குவதற்கு ஒரு உதாரணம் பதஞ்சலி யோகத்தின் சூத்திரத்தில் இருந்து காட்டுவோம்.

சூத்திரம் 1 .2 : "யோக சித்த வ்ருத்தி ந்ரோத"

இதன் பொருள் மனதின் விருத்திகளை கட்டுப்படுத்துவது எனவே பொதுவாக பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால் சித்த வித்தை (பின்னர் வரும் படங்களில் விளக்கப்படும் ) படி மனத்தை மூன்று வகையாக பிரிக்கலாம் என்பதனை சாதனை மூலம் அறிந்து கொள்ளும் மாணவன் படிப்படியாக மேல் மனதின் விருத்திகளை கட்டுப்படுத்தி, பின் சித்த மனத்தை கட்டுப்படுத்தி, பின் ஆழ் மனத்தை கட்டுப்படுத்தி, இறுதியாக பிரபஞ்ச மனத்தை கட்டுப்படுத்துவதே முழுமையான யோகம். இந்த நிலையில் மேல் மனதை கட்டுப்படுத்தும் பயிற்சி செய்பவரிற்கும், சித்தத்தை கட்டுப்படுத்துபவரிற்கும் இடையிலான அனுபவம், ஆற்றல் வேறுபாடும். 

இவை பற்றி வரும் காலங்களில் நீங்கள் மேலும் அறிந்து கொள்வீர்கள். தற்போதைக்கு நீங்கள் மனக்குழப்பம் அடையக்கூடாது என்பதற்காகவே விளக்கினோம். ஏனெனில் இன்றைய காலத்தில் சித்தர் பாடல்கள், சித்தர்களது கலைகள் எல்லாம் தற்காலத்திய தர்க்க கல்விமுறையிலேயே ஆராயப்படுகிறது,இதனால் தகவல்கள் பெறலாமே அன்றி அனுபவம் பெறமுடியாது என்பதனை விளங்கிக்கொள்ளவும். 

ஆகவே மனதில் இவற்றை கிரகித்துக்கொண்டு குருவுடன் சூஷ்ம தொடர்பினை ஏற்படுத்துவதற்கு தயாராவோம்.

5. குருவைத் தேர்ந்தெடுத்தல்

சித்த வித்தை என்பது மதம் மொழி கலாச்சாரம் என்பவற்றிற்கு அப்பாற்பட்டது,  ஆகவே குருவைத் தேர்ந்தெடுக்கும் உரிமை  மாணவரின் உரிமை, இதில் வீணான பயமுறுத்தல்கள் எவையும் இல்லை.  அடுத்து சூஷ்ம நிலையடைந்த சித்தர்கள் எவரிடமும் பேதமில்லை.  ஒவ்வொரு சித்தரும் இறுதி நிலையடையும் போது பிரபஞ்ச மகா சக்தியில்  கலக்கின்றனர். நாம் எமது மனதை ஒருமைப்படுத்தி அவற்றை பெறுவதற்கும் அவர்களின் பௌதிக இருப்பை நிலைப்படுத்துவதற்கும்  வைத்துக்கொண்டவை தான் பல தெய்வங்கள், பல சித்தர்களின் பெயர்கள் எல்லாம். ஆதாலால் இவற்றை கற்க விரும்புபவர்கள் உங்கள் மன நம்பிக்கைக்கு தகுந்தபடி குருவை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.  முக்கியமான நிபந்தனை அவர் சூஷ்மத்தில் இருக்க வேண்டும் அதாவது அவர் தற்போது உடலில் இல்லாதவராக இருத்தல் வேண்டும்.

ஆகவே கீழ்வருவனவற்றை தெளிவாக முடிவு செய்யுங்கள்;

1. நீங்கள் எந்த சித்தரை, ரிஷியை குருவாக கொள்ளப்போகிறீர்கள்?

2. பின்பு அவரை எந்த வடிவில் மனதில் உருவகப்படுத்த போகிறீர்கள்? (உருவத்திலா, ஜோதியிலா, மானசீகமாகவா)

3. தினமும் எந்த நேரத்தில் உங்கள் சாதனையினை செய்யப்போகிறீர்கள் என்பதனை முடிவு செய்யுங்கள்.

இவற்றை முடிவு செய்து கொண்டு அடுத்த பாடத்தினை எதிர்பாருங்கள், அதில் எப்படி குருவுடன் சூஷ்ம தொடர்பினை ஏற்படுத்திக்கொள்வது என்ற செயல்முறை பதியப்படும்.

ஓம் ஸத்குரு பாதம் போற்றி!
ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ:

நன்றி : உயர்திரு.சுமணன் அவர்கள்

Tagged:

0 comments:

Post a Comment